Mar 27, 2009

மலை மேலிருந்து குதித்த அனுபவம்

ஆபிஸில் ஏகப்பட்ட வேலை. மீட்டிங் மீட்டிங் என்று நாள் முழுவதும் ஒரே பிசி. பல பிரச்னைகள் அலசப்பட்டன. நிறைய திட்டு வாங்கி பதில்லுக்கு திட்டி ஏகப்பட்ட களேபரம்.

எல்லோரும் வீட்டுக்கு கிளம்பும் போது திடீரென்று கணேஷ் சொன்னான்.

“நாளைக்கு மலை மேலிருந்து குதிக்க போகிறேன்”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ உளருகிறான் நாளைக்கு பார்ப்போம் என்று விட்டுவிட்டேன். எனக்கு இருந்த வேலையில் ஒரே களைப்பாக இருந்ததால் படுக்க சென்று விட்டேன்.

அன்று லீவாகையால் நிதானமாக எழுந்தேன்.

கணேஷைக் காணவில்லை. அவன் முன்பே எழுந்து வெளியில் சென்று விட்டதாகக் கூறினார்கள். இன்னும் சிலரும் கூட சென்றிருப்பதாக சொன்னார்கள்.


நானும் இன்னும் சிலரும் விசாரித்துக்கொண்டு அவர்கள் சென்ற இடம் தேடிச் சென்றோம்.

மிக உயரமான மலை. பள்ளத்தாக்கு. அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்தால்?

ஒரே கூட்டமாக இருந்தது. கிட்டே போய் பார்த்தப்புறம் தான் கொஞ்சம் புரிந்தது. அது ஒரு சுற்றுலா தலம்.



கை கால் இடுப்பு என்று பிணைத்து உடலில் ஒரு பலமான பெல்ட் கட்டிக் கொண்டு உயரத்தில் இருந்து குதித்து பின் மின் மோட்டார் மற்றும் இரண்டு உதவியாளர்களைக் கொண்டு மேலே தூக்கி விடுவார்கள்.



காசுகொடுத்து இதெல்லாம் செய்யவேண்டுமா?

சில வெள்ளைக்கார ஆட்கள் குதித்தார்கள். சிலர் ஜோடியாக குதித்தார்கள்

அடுத்து எங்கள் டீம் …
முதலில் கணேஷ்.. பெல்ட் கட்டிக்கொண்டு ரெடியானான். உச்சியில் விளிம்புக்கு அருகே வந்து நின்றான்.



குதிக்கப்போறேன்.. குதிக்கப்போறேன் என்று பாவ்லா காட்டிக்கொண்டிருந்தான்.

க்யூ பெரிசாகிக்கொண்டிருக்கவே.. ஊழியர் பொறுமையில்லாமல் திடிரென்று தள்ளிவிட்டார். அப்படியே ஒரு 600 அடி பள்ளம் இருக்கும்.




கொஞ்ச நேரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனை மோட்டார் போட்டு மேலே தூக்கிவிட்டார்கள்.

எனக்கு பகீரென்று இருந்தது. கீழே குனிந்து பார்த்தால் வாந்தி வந்துவிடும் போலிருந்தது. பெல்ட் அறுந்து விழுந்தால் என்ன ஆகும்?
என்னதான் பலமான பெல்ட் என்றாலும் எதற்கு ரிஸ்க்.? பிழைக்க வந்த இடத்தில் இதெல்லாம் தேவையா? என்று நினைத்தேன்.



எல்லோரும் குதிக்கவே எனக்கும் ஆசை வந்து விட்டது. ஊரில் போய் போட்டோவெல்லாம் காட்டலாமே என்று நினத்தேன்.

கட்டணம் விசாரித்தால் அநியாயத்திற்கு சொன்னார்கள். ஒரு நாலைந்து நாள் ஓட்டலில் சாப்பிட்டுவிடுவேன்.

நான் ஒரு ஐடியா பண்ணினேன். அங்கிருந்த ஊழியரிடம் கேட்டதில் அவரும் ஒத்துக்கொண்டார்.

என் (இம்சை அரசன்) ஐடியா இது தான் (வீட்டில் சொல்லிவிடாதீர்கள்). பெல்ட் எல்லாம் கட்டிக்கொண்டு குளோசப்பில் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளவேண்டியது. பிறகு வேறு யாரோ குதிக்கும் ஒரு போட்டோ லாங் ஷாட்டில் எடுத்து கொள்ள வேண்டியது (லாங் ஷாட்டில் லைட்டிங் சரியில்லாததால் முகம் சரியாகத் தெரியவில்லை என்று சொல்லிவிடலாம்). என் ஆல்பத்தில் இரண்டையும் பக்கம் பக்கத்தில் ஒட்டிவிட வேண்டியது.

இப்படியாக நான் மலை மேலிருந்து குதித்த அனுபவம் இனிதே முடிந்தது.

திராட்சை சாப்பிடறீங்களா?

ஒரு நாள் பஸ்சுக்கு காத்திருந்தேன். சற்று தள்ளி ஒருவன் தள்ளுவண்டியில் திராட்சை விற்றுக்கொண்டிருந்தான். பஸ் ஸ்டாப்பில் அவ்வளவாக கூட்டம் இல்லை. அப்பொழுது தான் ஒரு பஸ் போயிருக்க வேண்டும்.

தள்ளுவண்டிக்காரன் என்னிடம் பேச்சுக்கொடுத்தான்.

“என்ன சார் பஸ்சுக்கு நிக்கிறீங்களா?”
(இது என்ன கேள்வி? பின்ன பிளேனுக்கா நிக்கறேன்?)

“ஆமாப்பா, எப்ப வரும்னு தெரியல.”

“எனக்கும் தெரியாது சார், நான் இன்னைக்கு இங்க நிப்பேன், நாளைக்கு ரெயிலடியில இருப்பேன். அடுத்த நாள் இன்னொரு எடம்“

“என்ன வெயில் சார். ரெண்டு நாளா நல்ல மழை இன்னிக்கு எப்பிடி வெயில் அடிக்குது”. சொல்லிக்கொண்டே மூக்கை சிந்தி சற்று தள்ளி உதறினான்.

“உங்களுக்கு ஒரு அரைக்கிலோ போடவா? அருமையான திராட்சை சார். கொட்டையில்லாதது. சீசன் முடியப்போகுது மகாராஷ்டிராவில இருந்து வரணும். டிசம்பர்ல ஆரம்பிச்சு ஏப்ரல் வரைக்கும் இருக்கும்”.

“வேண்டாம்பா நேத்துத் தான் அரை டஜன் வாழைப்பழம் வாங்கினேன் இன்னும் அப்பிடியே இருக்கு. அப்புறம் பார்க்கலாம்”

(மூக்கை சிந்தி.. அந்தப்பக்கம் திரும்பி உதறிவிட்டு கால் சட்டையில் துடைத்துக் கொண்டான்)

“என்னப்பா ஜலதோசமா?”

“ஆமா சார் தடுமன் புடிச்சுகிச்சு, ரெண்டு நாலா மழைல்ல”

“ஏம்பா கர்சீப் எதுவும் கொண்டு வரலையா?”

“துண்டா சார்? என்னா சார் செய்றது அவசரத்தில வந்திட்டேன்.”

“ஏம்பா இந்த பழத்தில் தண்ணியெல்லாம் தெளித்து கழுவலாமே”

“அட நீங்க ஒண்ணு தண்ணி ஊத்துனா அப்பிடியே அழுகிடும்”

ர்ர்ர் ர்ர்ர் ர்ர்ர் என்று சத்தத்துடன் சளியை உதறினான்
(இந்த முறை கால் சட்டையில் துடைத்துக்கொள்ளவில்லை போல இருக்கே?)



“ஒரு நாளைக்கு எவ்வளவு மெட்ராசுக்கு வருதுன்னு நினனக்கிறீங்க. சுமார் 100 டன். விலை இறங்கிப்போச்சு சார் வித்து தள்ளியாகணும்.
ஒரு பெட்டிக்கு அஞ்சு கிலோ ரூ 180க்கு எடுக்கிறோம்.

மீண்டும் ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்ர்ர்…..ர்ர்ர்ர்ர்.


“திராட்சை….திராட்சை அரைக்கிலோ இரூபது ரூபா” கத்தினான்

அப்பொழுது இன்னொருவர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்தார்.
“ஒரு அரைக்கிலோ போடுப்பா” என்றார்.

பழங்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தான்

தராசுக்குள் கவனித்தேன் ஒரு மாதிரி வெளிர் பச்சையாக தெரிந்தது. சூரிய ஒளி பட்டு பளபளத்துக் கொண்டிருந்தது.
(திராட்சையும் தான்)