Jul 27, 2009

ரொம்ப நேரம் கம்பியூட்டர் பயன்படுத்தினால்!

கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரமாவது உழைக்கவேண்டிய கட்டாயம். இப்படித் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பணிபுரிய வேண்டியதால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.


இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு அறுவை சிகிச்சைகளோ, மாத்திரைகளை விழுங்குவதோ அல்ல. சின்னச் சின்னதாக சில உடற்பயிற்சிகள், நம்முடைய உடலை ரிலாக்ஸ் ஆக்கிக் கொள்ளும் சில டெக்னிக்குகள், உட்கார்ந்திருக்கும் முறைகள் இவற்றைத் தெரிந்து வைத்திருந்தாலே போதும், எளிதாக துன்பத்திலிருந்து எளிதாகத் தப்பித்து வந்துவிடலாம்.


முதலில், உங்களுக்கு முன் இருக்கும் கம்ப்யூட்டர் திரை, உங்கள் கண் பார்வையிலிருந்து இரண்டு இஞ்ச் தாழ்வாக இருக்க வேண்டும். உங்கள் கண் பார்வையிலிருந்து கம்ப்யூட்டர் திரை உயரமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தலையைத் தூக்கித்தான் பார்க்க வேண்டும். அது உங்கள் கழுத்துக்கு அநாவசியமான வலியைக் கொடுக்கும். எனவே அந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.


எப்படி இதைச் சரி செய்வது?உங்கள் டேபிளின் உயரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் உட்கார்ந்திருக்கும் சேரின் உயரத்தை அதிகரிக்கலாம். கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, ரோலிங் சேரைப் பயன்படுத்தினால் நல்லது. ரோலிங்சேர் மூலம் எளிதாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு நகர முடியும் என்பதோடு உயரத்தையும் அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முடியும். இந்த உயரத்தைச் சரிசெய்கிற விஷயத்தை நம்மில் பலரும் தெரிந்துகொள்வதே இல்லை. கம்ப்யூட்டர் பற்றி படித்தவர்கள் அனைவரும் இந்த உயரம் சரிசெய்கிற விஷயத்தை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.


கம்ப்யூட்டர் முன்பு உட்காரும்போது, சேரில் சாய்ந்து உட்கார வேண்டும். சேரில் சாயாமல் நேராக உட்காருவதோ, கூன் போட்டு உட்காருவதோ கூடாது. கம்ப்யூட்டரில் உட்கார்ந்து டைப் செய்யும்போது, கைகள் இரண்டும் சேரின் கைப்பிடியின் மீது வசதியாக இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் கைப்பிடி மிகவும் கீழே இருக்கிறது அல்லது மிகவும் மேலே இருக்கிறது. இதனால் நமக்குத் தீமையே. இதைவிட, கைப்பிடி இல்லாமலிருப்பது நல்லது.


கம்ப்யூட்டரோடு பொருத்தப்பட்டிருக்கும் மௌஸ் பெரும்பாலும் அதற்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டுமே ஒழிய, டேபிளுக்கு மேலே தனியாக இருக்கக்கூடாது. மௌஸ் பக்கத்தில் இருந்தால்தான் அதை எளிதாக எட்டிப் பிடித்து பயன்படுத்த முடியும். மிக தூரத்தில் இருந்தால் கஷ்டப்பட்டு கையை நீட்டி மௌஸைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் கைகளுக்கும், தோளுக்கும் பாதிப்புதான்.


இதேபோல கம்ப்யூட்டர் டைப் செய்ய உதவும் விசைப்பலகையும் மேல்பாகம் சற்று தூக்கலாகவும், கீழ்பாகம் சற்று இறக்கமாகவும் இருப்பதைவிட, கீழ்பாகம் சற்று தூக்கலாகவும், மேல் பாகம் சற்று இறக்கமாகவும் இருந்தால் நல்லது.


கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதனால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும். மிக அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், ஒரு நல்ல கண் மருத்துவரை அணுகுவதுதான் சரியான விஷயம். ஆனால், கம்ப்யூட்டரால் கண்களுக்குப் பிரச்சினைகள் வராமல் தடுக்க சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


உதாரணமாக, இருபது நிமிடங்களுக்கு கம்ப்யூட்டர் திரையையே நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு பத்து வினாடிக்கு திரையிலிருந்து பார்வையை விலக்கி வேறு பக்கத்தில் உள்ள பொருளைப் பார்க்கலாம்.ஏன் இப்படிச் செய்கிறோம் தெரியுமா?சாதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கிறபோதோ, புத்தகம் படிக்கிறபோதோ கண்களை மூடி மூடித் திறக்கிறோம். கண்களுக்குத் தேவையான குளிர்ச்சியும், எண்ணெய்ப்பசையும் கண் சிமிட்டலால் கிடைக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் திரைகளை நாம் பார்த்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் இந்தக் கண்சிமிட்டல் நடப்பதில்லை. இதனால் கண் பாதிப்படைகிறது. இதைப் போக்கத்தான் வேறு ஒரு திசையில் பத்து வினாடிகள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்.


தொடர்ந்து ஐம்பது நிமிஷம் நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரிந்தால், ஒரு பத்து நிமிஷத்துக்கு வேறு ஒரு வேலையைச் செய்யலாம். உதாரணமாக, ஃபைல்களைக் கொஞ்சம் அடுக்கி வைக்கலாம். அல்லது போன் பேசலாம். லேசாக ஒரு நடை போட்டுவிட்டு வரலாம்.


இது மாதிரியான சின்னச் சின்ன விஷயங்களை கவனித்தாலே போதும், கம்ப்யூட்டரால் எந்தக் கஷ்டத்தையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி : டாக்டர் மது.

Jul 24, 2009

ஆஹா! வடை போச்சே!

Top 10 - Talk of the வலை உலகம்!

1. 'வடை போச்சே' என்பது பற்றி பல பதிவர்கள், பதிவு மற்றும் பின்னூட்டத்தில் புலம்பி இருக்கிறார்கள்.

2. 32 கேள்விகள் பிரபலமாக இருந்தது போய் இப்பொழுது பத்து!
பத்து வழிகள், பத்து விமர்சனம், பத்து கேள்விகள், பிடித்த பத்து, பிடிக்காத பத்து என்கிற வகையில் எல்லோரும் பதிவிட ஆரம்பித்துள்ளார்கள்.

3. சுமார் பத்துக்கு மேற்பட்ட புது திரட்டிகள் எல்லாப் பதிவுகளுக்கும் போய் இணைத்துக் கொள்ளும்படி பின்னூட்டம் போடுகிறார்கள்.

4. எப்பொழுதும் 10 விருதுகளாவது வலையுலகில் வழங்க! அல்லது வாங்கப் படுகிறது.

5. கவிதை, கட்டுரை, கதைகள், நகைச்சுவை இவற்றை விட மொக்கை பதிவுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

6. எல்லாப் புதிய பதிவர்களும் 10 இடுகைகளுக்குப் பிறகு சோர்ந்து விடுகிறார்கள்.

7. பத்து followers கிடைத்த பிறகு கிடைக்கும் சந்தோஷத்தில் உடனே 10 பதிவுகளுக்குப் போய் பின்னூட்டம் போடுகிறார்கள்.

8. பல பதிவர்கள் பின்னூட்டத்திற்கான மேட்டரையெல்லாம் அடுத்த பதிவிற்கான மேட்டராக ஆக்கிவிடுகின்றனர்.

9. Copy (Ctrl C) - Paste (Ctrl V) மட்டும் இல்லை என்றால் பல பதிவர்கள் இங்கே ஜல்லியடிக்க முடியாது.

10. பரபரப்பான தலைப்பை வைத்துவிட்டு அதற்கேற்ப விஷயம் கிடைக்காமல் பதிவர்கள் முழிக்கிறார்கள்!

Jul 23, 2009

தமிழ் அழியப் போகிறதா?

தமிழ் வாழ்க! தாய் மொழி வாழ்க என்று பலபேர் இங்கே கோஷம் போட்டுக் கொண்டிருக்க, அங்கே என்னவென்றால் பிள்ளைகளை ஆங்கிலம் கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள், பிள்ளைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்புங்கள் என்று சொல்கிறார்கள். தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினால் அவர்களின் குழந்தைகள் நன்றாக படிக்காதா? நம் பிள்ளைகளுக்கு நாம்தான் நம்முடைய தாய்மொழியைக்கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒரு சிலர் தமிழ்ப் பள்ளிக்கு தன் பிள்ளையை அனுப்பமாட்டார்கள். ஆனால் தமிழ் பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களைப் பார்த்துக் கேலி செய்கிறார்கள்.

தமிழனுக்கு தமிழ் என்ற உணர்வு முக்கியம். தமிழ் தெரிந்திருந்தும் தெரியாதது போல் ஆங்கில மொழியில் பேசுகிறார்கள். ஏன் தமிழ் என்றால் கசக்கிறதோ? நம்முடைய தமிழை வளர்க்க நாம்தான் போராட வேண்டும். எங்கேயும் எந்த இடத்திலும் நம் மொழி தமிழ்மொழி என்று பெருமையோடு நிமிர்ந்து நிற்க வேண்டும். தமிழர்கள் அனைவரும் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகிறார்கள். ஆனால் தமிழ்மொழி மட்டும் தலைமுறை தலைமுறையாக அழிந்து வருகிறது. இது நம்மவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையே. தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினால் தன் பிள்ளை நன்றாக படிக்க மாட்டார்கள் என்ற மூட நம்பிக்கை தமிழர்களிடையே பரவியுள்ளது. தமிழைக் கற்றுக் கொடுங்கள்; வீட்டில்தமிழில் பேசுங்கள்; தமிழ் நாளிதழ்களை வாங்கிப் படியுங்கள். நம் மொழியை நாம் தான் வளர்க்க வேண்டும் என்றெல்லாம் தமிழர்களுக்கே சொல்ல வேண்டிய நிலைமை வந்து விட்டது. தமிழ் மொழி தெரியாதவர்களிடம் வேற்று மோழியில் பேசலாம். தெரிந்தவரிடம் எதற்கு வேற்று மொழி? 'ஆங்கிலம்', ஆங்கிலம் என்றால் என்ன? அவர்களிடம்தானே முன்பு நாம் அடிமையாக இருந்தோம்.

தமிழன் தன்னுடைய தாய் மொழியை வைத்துக் கொண்டு மற்றவர்களுடைய மொழியை கடன் வாங்கி பேசுகிறார்கள். எதற்கு கடன் வாங்க வேண்டும்? தேவையில்லையே. நமக்குத் தான் நம் மொழிதமிழ்மொழி இருக்கின்றதே. மற்றவர்கள் தத்தம் மொழியை விட்டுவிட்டு நம் மொழியான தமிழ் மொழியில் பேசவில்லை. அவர்கள் அவரவர் சொந்த மொழியில்தானே பேசுகிறார்கள். நமது உரிமையை நாமே விட்டுக் கொடுத்தாற்போல் ஆகின்றதல்லவா. தமிழ் மொழி வளர தமிழர்களிடம் தமிழ் பேசுங்கள்.

தமிழனாக பிறந்து நமக்கே உரிய தமிழ் மொழியின் அருமை பெருமைகளை அறிய முற்பட வேண்டும். கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த நாம் தீந்தமிழை கற்றுக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சும்மாவா சொன்னார்கள். தமிழர்கள், தான் ஒரு தமிழன், என் தாய் மொழி தமிழ் என்று சொல்லிப் பெருமையடைய வேண்டும்.

தமிழ் மொழி உயர வேண்டும். தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும் வளர வேண்டும். தமிழர்கள்என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான், நமது முன்னோர்கள் அப்படிச்சொன்னார்கள். நம்முடைய மொழியை அடிப்படையிலிருந்து கற்றுக் கொண்டால்தான் அதன் முழு நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.

தமிழில் கணக்கிட முடியாத அளவிற்கு புறநானுறு, பத்துப்பாட்டு, பழமொழி, திருக்குறள், ஆத்திசூடி, என்று இன்னும் அறிவுக்கு உகந்த புத்தகங்களும், நாவல்களும் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் படிப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் இதமாகவும் தேன்போல் தித்திக்கும். ஆனால் தமிழை வெறுப்பவர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ் மொழி நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்கு அவசியமாகிறது. ஆனால் பலபேர் இதை அறியாமல் ஏன் வெறுக்கிறார்கள் என்று புரியவில்லை? இந்த பூமியில் உள்ள எல்லா மரங்களையும் எழுது கோலாகவும், நம்மை சுற்றியுள்ள ஏழு கடலை மையாகவும் கொண்டு எழுதினாலும் நம்முடைய தாய்மொழியான தமிழ்மொழியின் சிறப்பை எழுதி முடிக்க இயலாது.

இப்படி உலகில் பல மூலை முடுக்குகளில் உள்ள அனைவரின் மனதிலும் பசுமரத்தாணிப் போல் பதிந்துள்ள தமிழை அழிக்கவும், மட்டம் தட்டிக் கவிழ்க்க நினைப்பதும் தகுமோ? தமிழ் என்றும் நமது வலதுகையைப் போல் பலம் கொண்டது. அந்த பலத்தை நாம் இழக்கத்தான் வேண்டுமா?

தன்னுடைய தாய்மொழியான தமிழை வெறுப்பவன், அவன் தன் உயிரையே வெறுப்பதற்குச்சமமானவன். அவரவர் சொந்த வேலையை கவனிக்கின்ற இந்த நேரத்தில் நான் மட்டும் ஏன் தமிழைப்பற்றி பொரிந்து தள்ளுகிறேன் என்று நீங்கள் நினைக்கக் கூடும். நானும் உங்களுக்கு துணைப் போகலாம். ஆனால் தமிழ் பற்றுத்தான் என்னை விடமாட்டேன் என்கிறது.

தமிழைப் பற்றி ஒரு கவிஞர் இப்படி கூறியுள்ளார். சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும். எம் சாம்பலும் தமிழ் மகிழ்ந்து வேக வேண்டும்." தமிழ் என்பது நம்மில் உள்ள உயிருக்கு ஈடாகும். அதை வெறுத்தால் நாம் எப்படி உயிர் வாழ்வது. தாய்மொழி, என்னுடைய உயிர் என்று எண்ணுபவன் என்றும் மிழைவெறுக்கமாட்டான். தமிழை புறக்கணிக்கும் கூட்டத்திற்கு சாவுமணி அடிக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் தமிழ் கற்பதற்கு சிரமமில்லை. காரணம் கணினியின் வாயிலாகவும் தமிழ் கற்கும் வாய்ப்பை அறிவியல் நமக்குக் கொடுத்திருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நம் மொழியின் எதிர்காலம் நம் கையில்தான் இருக்கிறது. தமிழர்களால்தான் தமிழ் மொழியை கட்டிக் காக்க முடியும்.

ஒரு சிலர் தனக்கு வயதாகி விட்டாலும், நான் கிழவன் இல்லை, எனக்கு இன்னும் வயதாகவில்லை என்று மிகவும் கட்டோடு இருப்பார்கள். அதேப்போல்தான் தமிழ் கற்கும்போது மனதில் தமிழ்ப்பற்று என்று ஒன்று இருந்தால் போதும், தமிழ் மட்டும் அல்ல தமிழ் புலவனாகவும் மாறலாம், மூதறிவுள்ளது வாழ்வு - நல்ல முத்தமிழ்க் கற்பது வாழ்வு, என்று தமிழ் கவிஞரான பாரதிதாசன் கூறியுள்ளார்.

இதுபோன்ற தமிழ் எழுத்தாளர், தமிழ் கவிஞர் என்று பலப்பேர் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழ் கற்று அதற்கு பெருமையைச் சேர்த்து, தமிழை வாழ வைத்தனர். வாழவைக்கின்றனர். இன்றுவரை அவர்களுடைய பெயரும் புகழும் அழியா சின்னமாக இருக்கிறது.

அவர்களும்தான் தமிழ் மொழியை கற்று வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். அந்த காலத்தில் எந்தவொரு கல்வி சாதனங்களுமின்றி படித்து வாழ்க்கையின் அர்த்தமே தமிழில்தான் இருக்கிறது என்று புரிந்துக் கொண்டனர். அன்று அவர்கள் யாரும், நான் தமிழ் கற்றால், வாழ்க்கையில் முன்னேற மாட்டோம் என்று கருதவில்லையே. ஆனால் இக்காலத்தில் இவர்களுக்கு எதிர்மறையாக சில தரப்பினர்கள் கருதுவதால், பல தரப்பி னர்களை நம்பிக்கை இழக்க செய்கிறது. இதனால் தமிழ் கற்க விரும்புவோரும் கற்க மாட்டார்கள். இந்த செயல் தமிழுக்கு ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதனால் தமிழ் மொழி கற்க வி ருப்பம் இருந்தால் கற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து சாகடிக்க நினைப்பது கொடுமையாகும். அது தமிழை நேசிப்பவர்கள் இருக்கும் வரை நடக்காது. ஒருமொழித் தெரியாத ஊருக்கு போகிறோம். அங்கே நாம் பேசும் மொழி அவர்களுக்கு புரியவில்லை.

அவர் பேசும் மொழி நமக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் தம் மொழித் தெரிந்த ஒரு தமிழர் இருப்பாரா என்று தேடுவோம். ஆனால் அதே சூழ்லையில், நமக்கு வேற்றுமொழி தெரிந்து விட்டால் தமிழனை பார்த்தும் பார்க்காததுப் போல் வேற்று மொழிக்காரரிடம் சென்று பேசுவது கண்கூடு. அது ஏன்?

தொழில் ரீதியாக வேண்டுமானால் வேற்றுமொழி அவசியமாக கருதப்படுகிறது. ஆனால் தமிழர்களுக்கு வாழ்க்கை ரீதியாகப் பார்த்தால் தமிழ் மொழித்தான் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆதலால் நாம் என்றும் நம்முடைய தமிழ்மொழியைக்கற்று வாழ்க்கையில் மென்மேலும் உயர்வோம் முன்னேறுவோம்.

தமிழர்களிடம் தமிழ் பேசுங்கள்!

மங்காத தமிழென்று சங்கே முழங்கு.



பின்குறிப்பு : தலைப்பைப் பார்த்துவிட்டு யாரும் பீதி அடைய வேண்டியதில்லை!
தமிழ் கற்று, கற்பித்து, எழுதி, படித்து, பேசினாலே போதுமானது.




மெனக்கெட்டு புள்ளிவிபரம் :

தமிழ் பேசுகிறவர்கள் சுமார் எட்டரைக்கோடி.

2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அரசுமொழியாக அங்கீகாரம்.

10,000 க்கு மேல் தமிழ் கல்வெட்டுக்கள்.

இன்றைய தேதியில் தமிழ் இணைய தளங்கள் சுமார் 786,000 இருக்கின்றன!

இன்றைய தேதியில் தமிழ் வலைப்பூக்கள் சுமார் 42,946 இருக்கின்றன!

இப்பதிவில் 80 முறைக்கு மேல் தமிழ் என்கிற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது!

மேலும் இது என்னுடைய பள்ளிக் காலங்களில் கட்டுரைப்போட்டிக்கு எழுதியதில்லை என்றும், மீள்பதிவு இல்லை என்றும் உறுதி கூறுகிறேன்.



மேலும் விபரங்களுக்கு :

http://ta.pandapedia.com/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D

என்கிற சுட்டியில் பார்க்கவும்.

நன்றி.

Jul 21, 2009

இணையத்தில் அடி வாங்காமல் இருக்க.....

1 தமிழ் இணைய உலகத்தில் சுமார் 9 மாதங்கள் சுற்றிய பிறகு கற்றுக் கொண்ட சில விஷயங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் அடி வாங்காமல் இருக்க இதை பின்பற்றலாம்.

1. திகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் மேல்சாதி வெறியர் என்று தாக்குதலுக்கு உள்ளாவீர்கள்.

2. திமுகவை எதிர்த்து கருத்து சொல்லாதீர்கள் - நீங்கள் தமிழின துரோகி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.அல்லது நீங்கள் அதிமுக என்று சொல்லி மேலும் அவமானப்படுத்திவிடுவார்கள்.


3. நதி நீர் பிரச்சனை
கிருஷ்ணா - ஆந்திர பக்கமும் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் ஆந்திராகாரர் என்று முத்திரை இடப்படுவீர்கள்.
முல்லைபெரியாறு - கேரள பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதிவிட்டால் நீங்கள் மலையாளக்காரர் என்று அடி வாங்குவீர்கள்
காவிரி - கர்நாடக பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எழுதவும் வேண்டுமா. அடி வாங்க ஆசையா

4. ஹிந்தி
ஹிந்தி படித்தால் நல்லது பயனுள்ளது இப்படியெல்லாம் எழுதினால் நீங்கள் வடநாட்டுக்காரர். தமிழை அழிக்க முயலுபவர். வடநாட்டவரின் கைக்கூலி.

5. எழுத்தாளர்
ஒரு எழுத்தாளரை பாராட்டி பதிப்போ வலைப்பூவிலோ எழுதுவதற்கு முன்பு அவர் என்ன சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அது தெரியாமல் எழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் சாதி பெரும்பான்மையாக இருந்தால் அவர் கதை நல்ல கதை என்று எழுதி தப்பித்துக் கொள்வது நல்லது.

6. திரைபடம்
எஸ்பிபி நன்றாக பாடுகிறார் என்று நீங்கள் எழுதினால் நீங்கள் ஆந்திரா ஜால்ரா
யேசுதாஸ் பற்றி எழுதினால் நீங்கள் மலையாளக்காரர்
ஏஆர் ரகுமான் பற்றி எழுதினால் நீங்கள் முஸ்லீம் என்று சொல்லி இந்துக்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடலாம்

7. இதிகாசம்-புராணம்
ராமாயணம் மஹாபாரதம் பற்றி முடிந்த அளவு தவிர்க்கவும். அது ஆரியர்கள் எழுதியது. அதனால் திராவிடர்களுக்கு பிடிக்காது. ஏன் வம்பு. நீங்கள் ஐயோ நான் திராவிடன் தான் இருந்தாலும் ராமாயணம் பிடிக்கும் என்று சொன்னால் உங்கள் Birth Certificate ஐ இணையத்தில் போடுமாறு கேட்பார்கள்.

8. பிறப்பாலா வளர்ப்பாலா
நீங்கள் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதற்கு முன்பு வலைப்பதிவர் பிறப்பால் தமிழரா வளர்ப்பால் தமிழரா என்று பார்த்து பிறகு பின்னூட்டம் இடவும். ஒருவேலை வளர்ப்பால் தமிழராக இருந்தால் உங்களுக்கும் ஆப்புதான்.

9. ஷ ஜ ஸ க்ஷ
இது போன்ற வடமொழி எழுத்துக்களை எழதினால் நீங்கள் தமிழில் கலப்படம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தை ஆதரிக்கிறீர்கள். தமிழ் ஆவலர்களால் உங்களுக்கு கண்டனம் வரலாம். அதனால் ஷாஜஹானை சாசகான் என்றும் கமலஹாசனை கமலகாசன் என்றும் ரஹ்மானை ரகுமான் என்றும் கிருஷ்ணனை கிருட்டிணன் என்றும் குறிப்பிடுவது நல்லது.

10. அடிவாங்காமல் தப்பிக்க எல்லா இடத்திற்கும் போய் வாருங்கள். படித்து வாருங்கள். அநாவசியமாக கருத்தை எழுதி கெட்ட பேர் வாங்காதீர்கள்.

11. பின்னூட்டம்
பின்னூட்டம் இடவேண்டும் என்று கை அரித்தால்-
ஒருவேளை நீங்கள் கருத்துக்களங்களில் உறுப்பினராக இருந்தால் விவாகாரமான தலைப்புகளுக்கு பின்னூட்டம் இடுவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை. அந்த தலைப்பிற்கு சுமார் 10 பின்னூட்டம் வரை காத்திருங்கள். பிறகு அதில் பெரும்பான்மை அந்த தலைப்பிற்கு ஆதரவாக பேசினால் நீங்களும் அதற்கு ஆதரவாக எழுதிவிட்டு போவது நல்லது. நடுநிலையுடன் பேசுகிறேன் பேர்வழி என்று எதையாவது எழுதி வம்புக்கு ஏன் போகிறீர்கள்.

12. தினமலர் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை மேற்கோள் காட்டினால் நீங்கள் ஆரிய கைக்கூலி. தினகரன் தமிழ் முரசு மேற்கோள் காட்டினால் நீங்கள் திராவிட கைக்கூலி. இணையத்தில் எது பெரும்பான்மை என்பதை பார்த்து நடந்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம்

13. சோ என்று தெரியாமல் கூட எழுத வேண்டாம். அச்சோ என்று எழுத நினைத்தால் அச் என்று நிறுத்திக் கொள்ளுதல் நல்லது

14. முடிந்த அளவு தமிழ் நாடு செய்வதெல்லாம் சரி தமிழர்கள் செய்வது எல்லாம் சரி என்றே எழுதுங்கள். நம் பக்கமும் தவறு இருக்கிறது என்று சொல்லி துரோகி என்று முத்திரைக்கு ஆளாகாதீர்கள்.

15. கடவுள்
கடவுளை பற்றி எழுத நினைத்தால் சைவ மதத்தை பற்றி மட்டும் எழுதினால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. சிவனை பற்றி மட்டும் எழுதினால் நல்லது. வேறு கடவுள்களை எழுதினால் அவர்கள் ஆரிய கடவுள் என்பதனால் நீங்கள் ஆரியர் என்ற அவபெயருக்கு ஆளாக நேரிடலாம். முடிந்தால் கடவுளை பற்றி எழுதுவதையும் மதங்களை பற்றி எழுதுவதை பற்றியும் தவிர்க்கலாம். கேட்கமாட்டேன் என்றால் அனுபவியுங்கள்

16. ஆக நீங்கள் அரசியல் எழுதினால் கட்சிக்காரர் என்றும் நீங்கள் இந்தியராக நினைத்து எழுதினால் பிற மாநிலத்தவர் என்றும் நீங்கள் கடவுளை பற்றி எழுதினால் இந்த மதத்தவர் என்றும் அதிலும் குறிப்பிட்ட கடவுளை பற்றி எழுதினால் இந்த இனத்தவர் என்றும் பார்த்து பார்த்து தாக்குதல் நடத்த ஒரு கூட்டம் கணினி படித்து தமிழ் பயின்று இணையத்தில் அலைகிறது. அவர்களுக்கு வேலையே இது போன்ற பதிவுகளை தேடிப்பிடித்து அசிங்கப்படுத்துவது தான்.

17. போகக்கூடாத இடங்கள்
1. மறைந்த தலைவர்களை பற்றி அசிங்கமாக எழுதும் வலைப்பூக்கள்
2. தமக்கு பிடிக்காத கருத்தை கூறும் வலைஞர்களின் பிறப்பை பற்றியும் குடும்பத்தை பற்றியும் தரக்குறைவாக எழுதும் வலைப்பூக்கள்
3. தமிழை எத்தனை கேவலப்படுத்தமுடியுமோ அத்தனை கேவலமான வார்த்தைகளை வரிக்கு நாலாக பயன்படுத்தும் தளங்கள்.

18. நான் செய்த தவறு
நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள். முதலில் தமிழ் இணையதளங்களை கண்ட மகிழச்சியில் எல்லா இடங்களிலும் நிஜ பெயர் விபரம் கொண்டு பதித்துக் கொண்டேன். தமிழ் இணைய உலகம் மிகவும் தரம் குறைந்த நிலையில் இருப்பதால் Anoymous ஆக இருப்பதே நல்லது. எனக்கு இப்போது முழுவதும் நனைந்துவிட்டதால் முக்காடு எதற்கு என்று விட்டுவிட்டேன்.

19. மதநல்லிணக்கமா - ஹா ஹா

நீங்கள் ஒரு மதத்ததில் இருந்து மற்ற மதத்தையோ பாராட்டி பேசினால் உங்களுக்கு இருமுனை தாக்குதல் தங்கள் மதத்திலிருந்தும் மற்ற மதத்தவர்களிடமிருந்தும் வரும்.
உங்கள் மதத்தவர்கள் - மத துரோகி என்றும்
மற்ற மதத்தவர்கள் - உளவாளி என்றும் உங்களை சொல்லக்கூடும். இதே ஃபார்முலா சாதிக்கும் பொருந்தும்.

20. கொசுறு

எதை செய்தால் இணையத்தில் பிரபலம் அடையலாம்.

நீங்கள் ஏதோ நல்ல கவிதை கட்டுரை கதைகள் எழுதினால் இணையத்தில் பிரபலம் அடையலாம் என்று எண்ணியிருந்தால் நீங்கள் ஒரு முட்டாள்.

வலைப்பூவை துவங்கி மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பதிப்புகளை இடவேண்டும். அதை தமிழ் வலைப்பூ திரட்டிகளுக்கு அனுப்ப வேண்டும். பிறகு அவர்களே அதை பிரபல படுத்திவிடுவார்கள்.

நன்றி : லியோ மோகன்

Recession சந்திக்க சில யோசனைகள்

வேலை

1. வேலையை விடுவதை பற்றி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு யோசிக்க வேண்டாம்.

2. நேரத்திற்கு வேலைக்கு செல்லுங்கள். அதிக நேரம் அலுவலகத்தில் செலவிடுங்கள்.

3. அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. பிற டிபார்டுமண்டுகள்கும் உதவி செய்யுங்கள்.

5. வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள்.

6. நீக்கப்படவேண்டியவர்கள் பட்டியில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்க மேல் சொன்னவை உதவும்.

7. நிறுவனம் நஷ்டத்தில் ஓடினாலும் கடைசியாக இவரை நீக்கலாம் என்ற நிலையில் நீங்கள் இருக்க வேண்டும்.

8. முடிந்த அளவு நிறுவனத்திற்கு பணம் சேமிக்கும் வகைகளையோ அல்லது வருமானம் வரும் வழிகளையோ சொல்லி அதை செயல்படுத்த முயலுங்கள்.

9. மேலாளரிடம் முறைத்துக் கொள்ள வேண்டாம்.

10. இது என் தகுதிக்கு இல்லை என்று எந்த சிறிய காரியங்களையும் ஒதுக்க வேண்டாம்.இது வேலையை நிலைபடுத்திக் கொள்ள உதவும். இந்த சூழலில் வேலை போவது என்பது மிகவும் பெரிய இடியாக இருக்கும். வேறு வேலை கிடைப்பதும் கஷ்டம். கிடைத்தாலும் உங்களுக்கு பிடித்த வேலையாக இருப்பது சாத்தியம் இல்லை. இதை விட குறைந்த சம்பளம் தான் கிடைக்கும்.



வீடு

1. வீடு செப்பனிடும் வேலை இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுங்கள்.

2. எலெக்டிரானிஸ் பொருட்கள் டிவி, விசிஆர், டேப் ரிக்கார்டர், எம்பி3, காமிரா
போன்றவற்றை வாங்குவதை தவிர்க்கவும்.

3. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். புதிய வியாதிகள் வராமல் தடுக்கலாம். மருத்துவ செலவு இந்த நேரத்தில் ஒரு பெரிய பாரம்.

4. வீட்டில் மனைவி படித்தவராக இருந்தால் ஏதாவது வேலையில் சேர்ந்து கூடுதல் வருமானத்திற்கு வழி செய்துக் கொள்ளுங்கள்.

5. யாருக்கும் கடன் தர வேண்டாம். தனக்கு மிஞ்சினால் தான் தானம். பிறருக்கு உதவி செய்யக்கூடாது என்ற கெட்ட எண்ணம் இல்லை. இப்போது வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வேண்டாம்.

6. கொடுத்த கடன், பிற வரவுகளில் கவனம் செலுத்து வசூல் செய்யுங்கள்.

7. கிரெடிட் கார்டில் எதையும் வாங்க வேண்டாம். உங்களிடம் 50,000 ரூபாய் ரொக்கமாக இருந்தால் இந்த கடன் அட்டை 2 லட்சம் வாங்கும் பொய்யான சக்தியை கொடுக்கும். அந்த பொய்யான சக்தி உங்களை பிரச்சனையில் ஆழ்த்தும்.

8. இரண்டு மூன்று கடன் அட்டைகள் இருந்தால் அதை அனைத்தையும் திருப்பி கொடுத்து விட்டு ஒன்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

9. இப்போது இருக்கும் வீட்டிற்கு 5000 ரூபாய் வாடகை கொடுக்கிறீர்கள் என்றால் சற்றே வசதி குறைந்தாலும் 2500யில் சிறிய வீட்டிற்கு செல்ல முடியுமா என்று பாருங்கள். முடிந்தால் உடனே அதை செயல்படுத்துங்கள்.

10. மின்சார செலவு தண்ணீர் செலவை பாதியாக குறைத்துக் கொள்ளுங்கள்.

11. வீட்டு தொலைபேசியிலும் கை பேசியிலும் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் அதிகம் அரட்டை அடிப்பவராக இருந்தால் அதை இப்போதே நிறுத்துக் கொள்ளுங்கள்.

12. டாட்டா ஸ்கை சன் டைரக்ட் தவிர்த்து கேபிள் கிடைத்தால் போட்டுக் கொள்ளுங்கள்.

13. பிள்ளைகளுக்கு அதிகம் பாக்கெட் மணி கொடுப்பதை நிறுத்துங்கள்.

14. பழைய பொருட்களை எந்த அளவிற்கு உபயோகப்படுத்த முடியுமோ பாருங்கள். Reduce, Reuse, Recycle இந்நிலையில் ஒரு தாராக மந்திரம்.

15. நல்ல தெரிந்த நபர்களை Paying Guestஆக வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு இடம் உணவு அளித்த பிறகும் நல்ல சேமிப்பு கிட்டும்.



சுற்றுலா-பயணம்

1. எல்லா சுற்றுலா பயணங்களை தவிருங்கள்.

2. அலுவலக்திற்கு செல்லும் போது Car Pooling, ஷேர் ஆட்டோ, செய்ய முடியுமா என்று பாருங்கள். பெட்ரோல் செலவு குறையும்.

3. பேருந்துகளில் பயணம் செல்லும் பழைய விட்டுப் போன பழக்கத்தை நினைவு படுத்திக் கொள்வது நலம்.



நட்பு சுற்றம்

1.சில தூரத்து திருமணங்களுக்கு செல்வதையும் தவிர்க்கலாம்.

2. அப்படி சென்றால் பணமாக தங்கள் அன்பளிப்புகளை தாருங்கள்.

3. உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு சற்றம் வெட்கம் இல்லாமல் நெருங்கியவர்களிடம் பணமாகவே தாருங்கள் என்று சொல்லலாம். தப்பில்லை.



Shopping

1. அருகாமையில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்குவதை விடுத்து சற்று தொலைவாக சென்றாலும் Wholesale கடைகளில் சென்று சகாய விலையில் பொருட்களை வாங்குங்கள்.

2. கடைக்கு போவதற்கு முன் என்ன வேண்டும் என்று பட்டியலிட்டு வாங்குங்கள்.

3. அவற்றை மட்டும் வாங்குங்கள். Super Market சென்று கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கி வரவேண்டாம்.

4. தெரிந்த Brand மட்டும் வாங்குங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.

5. Toiletries அனைத்தும் இந்திய Brand வாங்குவதால் நிறைய மிச்சப்படுத்தலாம்.

நன்றி : லியோ மோகன்

Jul 15, 2009

எந்தக் கடை அரிசி சாப்பிடுகிறீர்கள்!

உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து நீ எந்தக்கடை அரிசி சாப்பிடுகிறாய்? என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வர்.

நான் கொஞ்சமாகத்தான் சாப்பிடுகிறேன். ஆனால் ரொம்ப வெயிட் போடுதுங்க என்று சொல்லப்படுவதை பரவலாக கேட்க முடிகிறது. உண்மைதான்.

குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் உடம்பு உட்கிரகிக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபடும். இத்தன்மை நம் உடல்களிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளான பிட்யூட்டாரி, தைராய்டு, அட்ரினல், மற்றும் கணையம் போன்றவற்றிலிருந்து சுரக்கப்படும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஹார்மொன் சரிவிகிதம் இல்லாமல் சுரந்தால் உடல் பருமனாகவும் செய்யும். இளைத்துப்போகவும் செய்யும்.

நடுத்தர வயதினர் எடைபோடுவது, பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.

ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடைகூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். அப்படி என்ன பூரிப்போ, உடம்பு ஒரேயடியாய் பருத்துப் போகுது என்பர்.

முதுமையில் அநேகமாக சில நோய்களின் தன்மையால் எடை கூடிவிடும்.

உடற்பயிற்சியின்மையால் ஊளைச்சதை போட்டு நோய்கள் ஏற்பட வாய்ப்பை உண்டாக்கிடும்.
குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்பர். மேலும் ஐம்பது வயதுக்கு மேல் இதய நோய், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய் போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.

சரி இதற்கு வழிதான் என்ன?

இதோ:

1. சாப்பாட்டை குறைத்து உடற்பயிற்சி ஈடுபடுவதுதான் சிறந்தது.

2. சரியான நேரத்தில் சாப்பிடவும்.

3. எண்ணெப் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

4. மாமிச உணவு வேண்டவே வேண்டாம்.

5. மதிய உணவில் காய்கறிகள் அதிகமாகச் சேர்க்கவும்.

6. இரவில் பாதி சாப்பாடு அல்லது சிற்றுண்டி பாதி வயிற்றுக்கு மட்டும் சாப்பிட்டு மீதிக்கு தண்ணீர் குடிக்கவும்.

7. பால், தயிர், பச்சை வெங்காயம் (50 கிராம்) சாப்பிடவும்.

8. பசிக்கும்போது நொறுக்குத்தீனி தவிர்த்து தண்ணீர், தக்காளிச்சாறு அல்லது முட்டைகோஸ் சாப்பிடலாம்.

9. மாவுச்சத்து குறைப்பதன் மூலம் படுவேகமாக உடல் எடை குறைய வாய்ப்புண்டு.

10. வயதுக்கேற்ப உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்யவும். நடத்தல், ஓடுதல் எதுவாக இருந்தாலும் சிறந்தது.

11. மூட்டு வலி இருந்தால் சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவை உகந்தவை.

12. சோம்பேறித்தனமாக வீட்டில் ஓயாது ஓய்வெடுக்காமல் ஏதாவது ஒரு வேலையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் சக்தி தீர்ந்து உடல் பருமனாவதைத் தடுத்துவிடும்.

நன்றி : ஆர்.கே.தெரசா

அவசர உலகில் அரங்கேறும் அநியாயங்கள்

வருவாயை அதிகரிக்கும் நோக்கோடு ஓடி ஓடி உழைக்கிறோமே. நமது வங்கிக் கணக்கில் பணம் அதிகரிக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஒரு செல்வத்தைத் தேடப்போய், இன்னொரு செல்வத்தை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்கின்றோமா? மேசையில் ஒன்றாக உட்கார்ந்து, ஒரு குடும்பமாக, நம்மில் எத்தனை பேர் உணவருந்துகின்றோம்? புள்ளி விபரங்களை நோக்கினால் சோகம்தான் எஞ்சுகின்றது. தேவைகளின் அதிகரிப்பும், அழுத்தமும், நம்மை ஓடி ஓடி உழைக்க வைக்கின்றன. வினோதமான, வித்தியாசமான நோய்கள் நம்மைத் தேடிவருகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், அவசர உலகில், அரங்கேறும் அநியாயங்கள் இவை என்றே சொல்லவேண்டி இருக்கின்றது.

நம்மை விட்டுவிடுவோம். நமது சமுதாயத்தின் நாளைய தூண்கள் என்று வர்ணிக்கப்படும் நமது குழந்தைகள் நிலைமை இன்று எப்படியிருக்கின்றது? மகா சோகத்திலும் சோகமான நிலையே , இவர்களின் நிலையாக இருக்கின்றது.

Fast Food என்று நாகரீக உலகில் வர்ணிக்கப்படும், அவசர உணவு வகையறாக்கள், இன்று நமது பிள்ளைகளைக் கூறுபோட்டு வருகின்றன. இவற்றோடு, ஐஸ்கிரீம் வகையறாக்களும் கைகோர்த்து, நமது பிள்ளைகளைச் சிறுவயதிலேயே குண்டுப் பிள்ளைகளாக்கி வருகின்றன. இந்தக் கோலம், நமது இளைய சமுதாயத்தை, சர்வநாசமாக்கி வருவது, உலகறிந்த உண்மை.
குழந்தையிலேயே குண்டாவது என்பது இன்று உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கடந்த வருடம் எடுத்த கணிப்பொன்றின்படி, உலகம் முழுவதும் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 22 மில்லியன் பேர், எடை அதிகரிப்போடோ அல்லது குண்டாகவோ காணப்படுகின்றார்கள். இதே அறிக்கையில், பத்துப் பிள்ளைகளை எடுத்தால், இதில் ஒரு பிள்ளை எடை அதிகரிப்போடு காணப்படுவதாகவும், உலகெங்கும் 5-17 வயதுவரை உள்ள 155 மில்லியன் பிள்ளைகள், எடை அதிகரிப்போடு காணப்படுவதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இந்த 155 மில்லியன் தொகையினால், 30-45 மில்லியன் வரையிலானவர்கள், குண்டுப் பிள்ளைகளாகவே நோக்கப்படுகின்றார்கள். இந்தப் பிள்ளைகள், உலகெங்குமுள்ள மொத்தத் தொகையினால் 2.3 சதவீதம் என்று கணிப்பிடுகின்றார்கள். திடுக்கிட வைக்கின்றன இந்தப் புள்ளிவிபரங்கள்.

இங்கே நாம் ஒன்றைக் கவனித்தாக வேண்டும். வயதை மீறிய எடை அதிகரிப்புள்ள பிள்ளைகள் (Overweight) குண்டுப் பிள்ளைகள் (Obese) என்று இரு பிரிவுகளாக, பிள்ளைகளின் எடைகளை நிபுணர்கள் நோக்குகின்றார்கள். சாதாரண எடை, அதை மீறிய எடை என்று எல்லை மீறும் பிள்ளைகளின் எடை, பின்பு குண்டுப் பிள்ளை என்ற பட்டத்தைக் கொடுத்துவிடுகின்றது.

குண்டுப் பிள்ளைகளாக இருப்பவர்கள் தொகை, நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது என்பதையும், ஆய்வு சுட்டிக்காட்டத் தவறவில்லை. உதாரணத்திற்கு எகிப்து நாட்டை எடுத்துக் கொண்டால், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 25 சதவீதத்தினர் குண்டாகவே காணப்படுகின்றார்கள். சிலி, பெரு, மெக்ஸிகோ போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், 4-10 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள், குண்டாக இருப்பது, எகிப்தைப் போல, 25 வீதத்திற்கு அதிகமாக இருக்கின்றது.

குண்டாக இருக்கும் பிள்ளைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்களேன். பொதுவாக, குண்டாக இருக்கும் பிள்ளைகளை, ஏனைய பிள்ளைகள் தமது நண்பர்களாக ஏற்றுக் கொள்வது மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். பிள்ளைகளின் பார்வையில் மட்டுமல்ல, வளர்ந்தவர்கள் கூட, உடல் பருத்த பிள்ளைகளை, வேண்டத் தகாதவர்களாகவே நோக்குகின்றார்கள். சோம்பேறிகள், முட்டாள்கள், அருவருப்பானவர்கள் என்றெல்லாம் குண்டுக் குழந்தைகளை ஏனைய குழந்தைகள் வர்ணிப்பதுண்டு. தமது சிறந்த நண்பர் என்று, எந்தக் குழந்தையும், இன்னொரு குண்டுக் குழந்தையை ஏற்றுக் கொள்வதேயில்லை.

துறுதுறுவென்று, ஓடியாடித் திரியும் சுபாவம், குண்டான குழந்தைகளிடம் இருப்பதேயில்லை. பெற்றோர்களும் சமயாசயமயங்களில், குண்டாக இருக்கும் தமது குழந்தைகளைத் திட்டிவிடுவதும் உண்டு. ஆறு தொடக்கம் பத்து வயதுக்கு உடபட்ட பிள்ளையாக, குண்டுப் பிள்ளை இருந்துவிட்டால், ஏனைய பிள்ளைகளின் சீண்டல் எப்பொழுதுமே அதிகமாக இருப்பதுண்டு.

குண்டாக வந்துவிட்டால், ஒரு குழந்தைக்கு வரும் கசப்பான அனுபவங்களைப் பார்த்தீர்களா? ஒரு குழந்தை குண்டாக இருந்தாலென்ன, மெலிந்த உடல்வாகு கொண்டதாக இருந்தாலென்ன, ஒவ்வொரு பிள்ளையும், தான் பிறரால் நேசிக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றது. சமுதாயம், இந்தப் பிள்ளையைப் புறக்கணிக்கத் தொடங்கும்போது, இந்தப் பிள்ளை மனோரீதியாகப் பாதிக்கப்படத் தொடங்கிவிடுகின்றது. விளைவுகளும் விபரீதமாகி விடுகின்றன.
எனவே நமது பிள்ளைகள், உடல் பருத்து, சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதற்கு முன்பாக, அவர்கள் உணவுண்ணும் முறையில், பெற்றோர்களாகிய நாம் மிகுந்த கவனமெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஐரோப்பிய நாடுகளில்தான் இந்தக் கோலம் என்றில்லை. ஆசிய நாடுகளையும், இந்தக் குண்டுக் கோலம் பற்றிப் பிடித்திருக்கின்றது. தாய்லாந்து நாட்டில் பொதுவாகவே எல்லோருமே மெலிந்த தோற்றம் உடையவர்களாகவே காணப்படுவதுண்டு. ஆனால் இங்கு அத்துமீறி நுழைந்துள்ள மேற்கத்திய கலாச்சாரத்தின் முத்திரையை, நாம் இன்று அங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.

இன்றைய நிலையில், தாய்லாந்தின் 14 வீதமான பிள்ளைகள் குண்டாகக் காணப்படுகின்றார்கள் என்பது அதிர்ச்சியான செய்திதான். மக்டொனால்ட்ஸ் போன்ற உணவகங்களின் படையெடுப்பும், அங்குள்ள உணவை நமது பிள்ளைகள் விரும்பி உண்பதும், இந்த விரும்பப்படாத நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது என்று சாடுகின்றார் ஒரு தாய். அது மாத்திரமல்ல கணினி முன்னால் உடகார்ந்தபடி, கணினி விளையாட்டுக்களை விளையாடுவதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், பிள்ளைகளைச் சோம்பேறிகளாக்கி இருக்கின்றன. உடற்பயிற்சி வெகுவாகக் குறைந்து வருகின்றது. இதுதான் இன்றைய பிள்ளைகளுக்கு கொழுத்த உடலைக் கொடுத்து வருகின்றது என்று அபிப்பிராயப்படுகின்றார் ஒரு தாய்.

பெற்றோர்களின் கவனத்திற்கு

இன்றைய பிள்ளைகளுக்கு, அதிக நேர உடற்பயிற்சி தேவைப்படுகின்றது என்கின்றது பிந்திய பீபீசி செய்தியன்று. வல்லுனர்களின் கருத்துப்படி, ஒரு பிள்ளை தினமும், 90 நிமிடங்களாவது, உடற்பயிற்சிக்குச் செலவிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

பிள்ளைகள் பலவழிகளில், உடற்பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம் என்கிறார்கள் வல்லுனர்கள். தினமும் பாடசாலைக்கு, மிதி வண்டிகளில் சென்றுவரலாம். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி என்பதில் சந்தேகமேயில்லை. பாடசாலைகளில், வெவ்வேறு விளையாட்டுகளில் பங்குபெற்றால், அதுவும் மிகச் சிறந்த உடற்பயிற்சியாகிவிடுகின்றது. பல பிள்ளைகளை , காரில் ஏற்றிச் சென்று, பாடசாலை வாசலில் பெற்றோர்கள் விட்டுச் செல்லும் கோலமே இன்று தொ¢கின்றது. பிள்ளைகளுக்கு சொகுசான வாழ்க்கை தேடி வந்திருப்பதாக, பார்வையில் தொ¢கின்றது. ஆனால் நிஜமோ வேறு. பிள்ளைகளின் உடல்நலம் நாசமாக்கப்படுகின்றது என்பதுதான் நிஜம்.

குண்டாக ஒரு பிள்ளை வருவதற்கு , தவறான உணவுப் பழக்கம் மாத்திரமல்ல, பரம்பரை உடல்வாகும் காரணமாகின்றது. பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களின் பெற்றோர்களோ உடல் பருத்தவர்களாக இருந்தால், பிள்ளைகள் குண்டாக வருவதற்கு , வாய்ப்புகள் அதிகம்.
ஏனைய பிள்ளைகளைப் போல, உங்களையும் நேசிக்கின்றோம் என்பதை, குணடாகி விட்ட பிள்ளைக்குத் தெரியப்படுத்தப் பெற்றோர்கள் தவறவேண்டாம்.

அதிக பழங்களை, மரக்கறி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளப் பழக்குங்கள். பிள்ளைகளைக் கொண்டே, கடைகளில் இவற்றைத் தெரிவு செய்து வாங்கும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவாருங்கள். இனிப்புப் பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதை வெகுவாகக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளை, காலை ஆகாரத்தைத் தவிர்க்காமல் பார்த்துக் கொள்வது, உங்கள் முக்கிய கடமையாகின்றது. காலை ஆகாரத்தைத் தவிர்க்கும் குழந்தை, களைப்போடும், பசியோடும் வீடு வரும். பல நொறுக்குத் தீனிகளை, பசி காரணமாகத் தேடும். இந்த நிலை வேண்டவே வேண்டாம். குடும்பமாக உட்கார்ந்து உங்கள் பிள்ளைகளோடு, ஒரு நாளில் ஒரு நேரத்திலாவது, உண்ணப் பழக்குங்கள். இந்த வழியில், உங்கள் பிள்ளை, பல்வேறுபட்ட உணவு வகைகளை விரும்பி உண்ணக் கற்றுக் கொள்ளும்.

ஓர் உணவை பிள்ளை உண்ண மறுத்தால், மனம் சோர்ந்துவிடாதீர்கள். பிள்ளையின் போக்கில் விட்டுவிடுங்கள். பிள்ளை தவிர்க்க நினைக்கும் உணவின் முக்கியத்துவத்தை அடிக்கடி சொல்லிக்காட்டுங்கள். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.. பத்தாவது தடவை, நீங்கள் கொடுக்கும் உணவைப் பிள்ளை ஒருவேளை ஏற்றுக்கொள்ளலாம்.

கோலா அருந்துவதைக் குறைத்து, நீரை விரும்பி அருந்தும் பழக்கத்தைக் குழந்தைக்குச் சொல்லித் தாருங்கள். புதியதொரு பழக்கத்தைக் குழந்தைக்குச் சொல்லித் தருவதில், நிறையச் சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கலாம். ஆனால் இந்த முயற்சியின் கனிகளைச் சுவைக்கும்போது, நீங்கள் அடையும் ஆனந்தம், வர்ணிப்புக்கு அப்பாற்பட்டது.

பிள்ளை விரும்பாத உணவைச் சாப்பிட்டால், பிள்ளை விரும்பும் ஓர் உணவு அதிகமாகக் கிடைக்கும் என்று இடையிடையே ஆசைகாட்டுங்கள். இங்கேயும் இலஞ்சமா என்று கேட்காதீர்கள். பிள்ளைகளின் அன்பைக் கவருவது, உங்களுக்கு மிகமிக அவசியமாகின்றது.
அளவில் கொஞ்சமாக உணவைப் பரிமாறுங்கள். பின்பு பிள்ளையோடு நயமாகப் பேசி, இன்னும் கொஞ்சம் உணவை ஊட்டுங்கள். இது பிள்ளைக்கு, உணவில் அதிக விருப்பை ஏற்படுத்த ஒரு யுக்தியாகும்.

அவசர உலகில், அறிவுரைகள் சொல்வது சுலபம். நடைமுறையில் கொண்டுவருவது மிகச் சிரமம் என்கிறீர்களா? மனமுண்டானால் இடமுண்டு என்பதை மறந்துவிட்டீர்களா? ஆர்வம் இருந்தால், நம்மால் எதையும் சாதிக்க முடியும். குண்டான குழந்தை என்பதால், ஏனைய பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு, பலவற்றில் பின்னிற்கும் ஒரு நிலை, உங்கள் குழந்தைக்குத் தேவைதானா?

வேண்டவே வேண்டாம்.
இன்றே செய்வோம்.
நன்றே செய்வோம்.

சிறந்த ஆரோக்கியமே உயர்ந்த செல்வம் என்கிறார்கள்.

நன்றி : ஏ.ஜே.ஞானேந்திரன்

Jul 13, 2009

மெஸ்மரிஸம் கற்றுக்கொள்ளுங்கள்! (இலவசமாக)

உங்கள் கண்களில் அதீத சக்தி இருக்கிறது. சும்மா உற்றுப் பார்ப்பதின் மூலமே உங்கள் சக்தியை வெளிப்படுத்த முடியும்

சரி. கீழ்க்கண்ட படத்தைப் பார்க்கவும்.





இதில் சில சக்கரங்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

'மெனக்கெட்டு' வாழ்க என்று சொல்லிவிட்டு, அதில் ஒன்றைக் கூர்ந்து பார்க்கவும்
அந்த சக்கரம் அப்படியே நின்று விடும்.

அப்படியே மெதுவாக அடுத்த சக்கரத்தைப் பார்க்கவும்.அந்த சக்கரம் நின்று விடும்.
எதை உற்றுப் பார்க்கிறீர்களா அந்த சக்கரத்தை நிறுத்தும் சக்தியை மெனக்கெட்டு பெறலாம்.

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கியும் பார்க்கலாம்.

எச்சரிக்கை : 'பலான' படங்களில் இது போல் ரொம்ப நேரம் உற்றுப் பார்க்க வேண்டாம்.

கமல் திரைப்படங்கள் - பார்த்த (மற்றும் பார்க்க நினைத்த) TOP 100

நடிகர் கமல் நடித்த படங்கள்.

பெரும்பாலனவை பார்த்தாகிவிட்டது.

ஒரு சில விட்டு போயிருக்கிறது. படங்களில் சில கிடைக்கவில்லை (அல்லது தற்போது தியேட்டரில் ஓடவில்லை).

அல்லது http://video.google.com/ ல் 'திரைப்படம்' என்று தேடினால் 908 result காட்டுகிறார்கள். அதில் எத்தனை கமல் படம் வருகிறது என்று பார்க்கவேண்டும். duration >20 min என்று filter செய்யவேண்டும்.

நண்பர்களின் உபயோகத்திற்காக இங்கு பட்டியல் தரப்படுகிறது.

வரிசை பெயர்
--- -------------------
1 களத்தூர் கண்ணம்மா
2 பார்த்தால் பசிதீரும் (முதல் இரட்டை வேடம்)
3 ஆனந்த ஜோதி
4 வானம்பாடி
5 குறத்தி மகன்
6 அரங்கேற்றம்
7 சொல்லத்தான் நினைக்கிறேன்
8 அவள் ஒரு தொடர்கதை
9 குமாஸ்தாவின் மகள்
10 நான் அவனில்லை
11 பணத்துக்காக
12 பருவ காலம்
13 அந்தரங்கம்
14 அபூர்வ ராகங்கள்
15 ஆயிரத்தில் ஒருத்தி
16 சினிமா பைத்தியம்
17 தங்கத்திலே வைரம்
18 தேன் சிந்துதே வானம்
19 பட்டாம்பூச்சி
20 பட்டிக்காட்டு ராஜா
21 மாலை சூட வா
22 ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
23 மன்மத லீலை
24 மூன்று முடிச்சு
25 மோகம் முப்பது வருஷம்
26 லலிதா
27 16 வயதினிலே
28 அவர்கள்
29 ஆடு புலி ஆட்டம்
30 உயர்ந்தவர்கள்l
31 அவள் அப்படித்தான்
32 இளமை ஊஞ்சலாடுகிறது
33 சட்டம் என் கையில் (தமிழில் முதல் இரட்டை வேடம்)
34 சிகப்பு ரோஜாக்கள்
35 தப்புத் தாளங்கள்
36 நிழல் நிஜமாகிறது
37 மனிதரில் இத்தனை நிறங்களா!
38 அலாவுதீனும் அற்புத விளக்கும்
39 அழியாத கோலங்கள்
40 கல்யாணராமன் (தமிழ்)
41 தாயில்லாமல் நான் இல்லை
42 நினைத்தாலே இனிக்கும்
43 நீயா!
44 நீல மலர்கள்
45 மங்கள வாத்தியம்
46 ஜப்பானில் கல்யாணராமன் (தமிழ்)
47 அக்னி சாட்சி
48 பகடை பன்னிரெண்டு
49 சட்டம்
50 தூங்காதே தம்பி தூங்காதே (இரட்டை வேடம்)
51 எனக்குள் ஒருவன் (இரட்டை வேடம்)
52 அந்த ஒரு நிமிடம்
53 உயர்ந்த உள்ளம்
54 ஒரு கைதியின் டைரி (இரட்டை வேடம்)
55 காக்கிச் சட்டை
56 மங்கம்மா சபதம்
57 ஜப்பானில் கல்யாணராமன் (இரட்டை வேடம்)
58 சிப்பிக்குள் முத்து
59 நானும் ஒரு தொழிலாளி
60 புன்னகை மன்னன் (இரட்டை வேடம்)
61 விக்ரம் (த)
62 காதல் பரிசு
63 நாயகன்
64 பேர் சொல்லும் பிள்ளை
65 உன்னால் முடியும் தம்பி
66 சத்யா (த)
67 சூர சம்ஹாரம்
68 பேசும் படம்
69 வெற்றி விழா
70 இந்திரன் சந்திரன் (இரட்டை வேடங்கள்)
71 மை டியர் மார்த்தாண்டன்
72 மைக்கேல் மதன காம ராஜன் (நான்கு வேடம்) (த)
73 குணா
74 சிங்காரவேலன்
75 தேவர் மகன் (த) (எ)
76 கலைஞன்
77 மகராசன் (த)
78 நம்மவர்
79 மகளிர் மட்டும் (நட்புக்காக (த)
80 மகாநதி (திரைப்படம்) (b)
81 குருதிப்புனல்
82 சதி லீலாவதிi (த)
83 அவ்வை சண்முகி
84 இந்தியன் (திரைப்படம்)(இரட்டை வேடம்)
85 இந்துஸ்தானி (Hindi) (இரட்டை வேடம்)
86 காதலா காதலா
87 தெனாலி
88 ஹே ராம் (த) (எ) (இ)
89 ஆளவந்தான் (இரட்டை வேடம்) (எ)
90 லேடீச் ஒன்லி
91 பஞ்சதந்திரம்
92 பம்மல் கே.சம்பந்தம்
93 அன்பே சிவம் (எ)
94 நள தமயந்தி (த) (எ)
95 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
96 விருமாண்டி (த) (எ) (இ)
97 மும்பை எக்ஸ்பிரஸ் (த) (எ)
98 பொய்க்கால் குதிரை
99 வேட்டையாடு விளையாடு
100 தசாவதாரம் (திரைப்படம்) (பத்து வேடங்கள்)

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?



நீரிழிவு நோய் என்பது என்ன?

அன்றாட அலுவல்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் குளுக்கோஸ் (சர்க்கரை) தான் உடலிலுள்ள செல்களுக்குத் தேவை. நாம் சாப்பிடும் உணவுதான் செரித்த பிறகு குளுக்கோஸாக மாறுகிறது. குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தில் கலந்து உடலிலுள்ள வெவ்வேறு செல்களைச் சென்றடைகிறது. உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பார்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா?

கீழே இருக்கும் அறிகுறிகளையும் அதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் குறித்துக் கொள்ளுங்கள்.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் – 4
2. எப்போதும் பசித்தல் – 2
3. தண்ணீர் அதிகமாகக் குடிப்பது – 4
4. எப்போதும் களைப்பாக இருக்கும் – 2
5. ஆறாத புண் – 2
6. பிறப்புறுப்பில் இன்பெக்சன் – 3
7. உடலுறவில் ஈடுபாடு இல்லாதிருத்தல் – 2
8. காரணமில்லாமல் எடை குறைதல் – 2
9. இரத்த சொந்தங்களில் வேறு எவருக்கேனும் நீரிழிவு - 2
10. மிகக் கூடுதல் எடை – 3
11. கால் மரத்துப் போய் உறுத்துதல் – 2
12. மங்கலான பார்வை – 2
நீங்கள் உங்களுக்காகக் குறித்துள்ள மதிப்பீட்டின் கூட்டுத் தொகை 7-க்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கலாம். எனவே தகுந்த மருத்துவரை அணுகி உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவை கவனிக்காததால் ஏற்படும் விளைவுகள்

நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் . கட்டுக்குள் இல்லாத நீரிழிவு ,பல முக்கியமான உடல் உறுப்புகளையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும். குறிப்பாக,

பார்வையை இழக்க நேரிடலாம் அல்லது பார்வை மங்கலாம்.

சிறுநீரகங்கள் சேதமடையலாம்

இன்பெக்சன் அடிக்கடி ஏற்படலாம்

காங்கரீன் எனும் புண், பாதத்தில் பிரச்சனைகள் வரலாம்.

உடலுறவில் இயலாமை ஏற்படலாம்

மூளைச்சேதமும் ,மாரடைப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

நீரிழிவு நோயைத் துவக்கத்திலேயேக் கட்டுப்படுத்திவிட்டால் ,பல சிக்கல்கள் தடுக்கப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கை வாழ உதவும்.

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில்
1. உணவுமுறை
2. உடற்பயிற்சி
3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண்காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்தல்
4. இன்சுலின் பயன்படுத்துதல்
இந்த சிகிச்சைகளைத் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல்லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்.

1. உணவு முறை

சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.

கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன்படுத்தவும்.

சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.

கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை, வெல்லம்,தேன்,ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

மீன்,கோழி , பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப்பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைகளையும் மருந்துகளையும் தெரிவிக்கலாம்.

நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்

உங்கள் மருத்துவரிடம் உங்களுக்காக ஒரு உணவு அட்டவணையைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக்கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உணவு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

மாற்று உணவு வகைகள் என்றால் என்ன?



ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகைகள்தான் மாற்று உணவு வகை.ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.

1. காய்கறிகள்
2. கார்போஹைட்ரேட்ஸ்.
3. பழங்கள்
4. இறைச்சி, மீன் மற்றும் பருப்புகள்
5. பால் மற்றும் பால் தயாரிப்புகள்
6. தானியங்கள்
7. எண்ணெய்,கொழுப்பு மற்றும் கொட்டை வகைகள்.

2. உடற்பயிற்சி.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்,
1. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.

உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை.

உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்தவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.

கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும்

மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும்.

காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானதாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.

3. மாத்திரைகள்

சில சமயங்களில் , இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது. சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும்.

சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, கணையத்தைத் தூண்டிவிடுகிறது. மாத்திரைகள் சிறப்பாகச் செயல்புரிய , இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

சில மாத்திரைகள் , செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் இரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன.

4.இன்சுலின்

நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது.

இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?

இரைப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்திலிருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குள் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. இரத்தத்திலேயே அதிக அளவில் தங்கிவிடும். எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு இரத்த ஓட்டத்தில் கலந்து , உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில் படர்ந்து செல்லினுள் சர்க்கரை புக வழி செய்கிறது.

இன்சுலினின் வகைகள்

இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.

இன்சுலின் அதன் மூலத்தைப் பொறுத்து ஹியூமன், போர்சைன், போவைன் போன்ற வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஹியூமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போவைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்களைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

இன்சுலின் ஊசி எப்படி தாமாகவே போட்டுக் கொள்வது?



முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.

உங்கள் இன்சுலின் சக்திநிலைக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ். நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.

இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.

தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.

ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.

இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.

தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்

நினைவில் வைத்திருக்க வேண்டியவை.

நீங்கள் நீரிழிவைப் பற்றி அறிந்து, புரிந்து சமாளிக்க மனம் வைத்தால் போதும். மற்றவரைப் போல ஆரோக்கியமாக, உற்சாகமிக்க, மனம் நிறைந்த வாழ்க்கை வாழலாம்.

உங்கள் நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய நபர் நீங்கள்தான். மருத்துவரும்,மற்றவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அறிவுரை வழங்குவார்கள்.

நீங்கள் நோயுற்றிருந்தாலும் இன்சுலினைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் சாப்பிட முடியாத போது திரவநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டும் போதாது. சிகிச்சையின் முடிவுகளைத் தவறாமல் குறித்து வைத்துக் கொண்டால்தான் நீரிழிவை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.

தவறாமல் பரிசோதனைகள் செய்வதும், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்வதும் மிக முக்கியம்.

ஹைப்போக்ளைசீமியாவை உடனடியாக சமாளிக்க கையில் குளுக்கோஸ், சர்க்கரை போன்ற இனிப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கைகள், பாதங்கள், கண்கள், பற்கள் மற்றும் சருமத்தை நன்கு கவனித்துக் கொள்ளவும்.

சரிவிகித உணவு, தவறாத உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் நடக்கும் என்ற நம்பிக்கை போன்றவற்றால், நீரிழிவு இருந்தாலும் உங்கள் இலக்கை அடைய உதவும்.

நன்றி :- " Magnus Novo Nordisk " வெளியிட்ட நீரிழிவுக்கான சிறு கைப்பிரதி.

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?



மாறுகண்

ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருப்பது மாறுகண் எனப்படும்.

சிலருக்கு மாறுகண் எப்போதும் இருக்கும் மற்றும் சிலருக்கு அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

மாறுகண் உடைய குழந்தைகள் பார்க்கும் போது, ஒரு கண் நேராகவும், மறு கண் உட்புறமோ, வெளிப்புறமோ, மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ இருக்கலாம்.

உரிய காலத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் சோம்பலுற்ற கண் என்ற நிலை உருவாகி நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தும்.

மாறுகண்ணின் காரணங்கள்

பரம்பரையாக வருதல்

கண்தசைகள் பாதிக்கப்படுதல்

கண் தசைகளுக்கான நரம்பில் கோளாறு ஏற்படுதல்

கண்புரை, கருவிழி பாதிப்பு, கண் விழித்திரை கோளாறு, கண் நரம்பு கோளாறு, புற்று நோய்க் கட்டிகள், தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவற்றால் ஏற்படும் குறைவான பார்வை

காயம்படுதல்

அறிகுறிகள்

ஒரு கண் மட்டும் அல்லது இரண்டு கண்களும் மாறுபட்ட திசையில் இருக்கலாம்.

பார்வையில் குறைபாடு இருக்கலாம்.

பிரகாசமான வெளிச்சத்தில் ஒரு கண்ணை மட்டும் மூடிப் பார்க்கக் கூடும்.

இரண்டு கண்களையும் இணைத்துப் பார்க்க முயற்சிக்கும் போது தலையைச் சாய்த்தோ அல்லது திருப்பியோ பார்ப்பது போன்ற அறிகுறிகளும் சில சமயங்களில் தென்படலாம்.

சில சமயங்களில் பார்க்கும் பொருள் இரண்டாகத் தெரியலாம்.

மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறியல்ல. அது உங்கள் குழந்தையின் பார்வையையும் தோற்றத்தையும் பாதிக்கும்.

சிறு குழந்தைகளுக்கு மாறுகண் இருந்தால் இரண்டு வயதிற்குள்ளேயே உரிய சிகிச்சை அளித்தால் நிரந்தரமான பார்வை இழப்பைத் தவிர்க்கலாம்.

குழந்தை வளர்ந்த பிறகு, சிகிச்சை மூலம் வெளித்தோற்றத்தை மட்டுமே சரி செய்யலாம். இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியாது.

நிரந்தர பார்வையிழப்பைத் தவிர்க்க சிகிச்சை முறைகள்

1. தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வையால் ஏற்படும் மாறுகண் உள்ளவர்களுக்கு தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம்.

2. கண்களுக்கு பயிற்சி: மாறுகண் இல்லாத நல்ல பார்வையுடைய கண்ணை மறைத்து, மாறுகண் உடைய கண்ணால் பார்க்க வைப்பதன் மூலம், அந்த கண்ணின் பார்வையை மேம்படுத்தலாம்.

3. அறுவை சிகிச்சை:

நல்ல கண்ணை மூடி, மாறுகண்ணால் பார்க்க வைக்கும் பயிற்சி மற்றும் தகுந்த கண்ணாடி அணிவிப்பதன் மூலம், பார்வை மேம்பட்ட பிறகு மாறுகண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்படும் .

மயக்க மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு, அந்த சமயத்தில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கக் கூடாது.

ஒரே சமயத்தில் இரண்டு கண்களிலுமோ அல்லது ஒரு கண்ணில் மட்டுமோ அறுவை சிகிச்சை செய்யலாம்.

விழி வெண்படலத்தில், அதாவது விழிக்கோளத்தின் வெள்ளைப் பகுதியில்தான் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

அறுவை சிகிச்சை முடிந்த பின் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கினால் போதும்.

இந்த அறுவை சிகிச்சை செய்வதோடு சிகிச்சை முடிந்து விடுவதில்லை. தெளிவான பார்வையைப் பெறத் தொடர்ந்து கண்ணாடி அணிய வேண்டியிருக்கலாம். நல்ல நிலையில் உள்ள கண்ணை மறைத்து, மாறு கண்ணால் மட்டும் பார்க்க வைக்கும் பயிற்சியை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகும் நீடிக்க வேண்டியிருக்கலாம்.

நன்றி :- மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட சிறு கைப்பிரதி.